Friday, September 19, 2014

அரசுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தனர் பல்கலை மாணவர்கள்


19 செப்ரெம்பர் 2014, வெள்ளி
uthayan 

அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 கல்வியை வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கின்றமை மற்றும் மாணவர்களுக்கு எதிரான அடக்கு முறைகளை கண்டித்தே இந்த பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலவச கல்வியை எதிர்கால சமூகத்திற்கு கிடைக்க விடமால் அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் வீடு வீடாக சென்று மக்களை தெளிவுப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தது.

  மருதானையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் நஜத் இந்திக்க மேற்கண்டவாறு தொரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வியை விற்றல், மாணவர்கள் மீதான வகுப்பு தடை, மரண அச்சுறுத்தல், புலமைப் பரிசு தொகை அதிகரிப்பு, உள்ளிட்ட மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் நாம் பல்வேறு கலந்துரையாடல்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்த போதிலும் எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசு மற்றும் உயர் கல்வியமைச்சு எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை.
நாட்டின் உன்னத தலைவர்களின் அர்ப்பணிப்பு செயற்பாடு மூலம் பெறப்பட்ட இலவச கல்வியையும் பல்கலைக்கழக கல்வியையும் முற்றாக இல்லாமல் ஒழித்து தனியார் துறைக்கு விற்கும் செயற்பாடுகளையே இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது.
 அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழக கல்வியினை குறித்த தொகை பணத்தை செலுத்தி பட்டத்தினை பெற வேண்டிய நிலைமை ஏற்படும்.
உலகத்தில் ஏனைய நாடுகள் இலவச கல்வியை நடை முறைப்படுத்தி நாட்டில் படிப்பறிவு மற்றும் எழுத்தறிவு வீதங்களை அதிகரிப்பதன் மூலம் கல்வி மட்டத்தை நாட்டில் உயர்த்தவே முயற்சிக்கின்றது. எமது நாட்டில் மாத்திரமே இலவச கல்வியை இல்லாமல் ஒழிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது எனத் தெரிவித்தார்.

Click here to see the news at: www.onlineuthayan.com

No comments:

Post a Comment